Wednesday, 6 February 2013

முஹம்மத்- யார் இவர்?

Photos of You


முஹம்மத்- யார் இவர்?

இறுதிதூதராகிய முஹம்மத் (ஸல்) அவர்களை இஸ்லாமிய மக்கள் ஏன் இவ்வளவு விரும்புகிறார்கள்? யார் இவர்? அப்படி என்ன நற்பண்புகள் தான் அவரிடத்தில் இருந்தது? இக்கேள்விகளுக்கான விடையே.. இது.
சிறிது நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள்... இதை படித்து முடிக்கும் போது "இவர் ஏன் சிறந்தவர்" என்ற கேள்விக்கு உங்கள் மனம் சரியான விடை சொல்லும் (இறைவன் நாடினால்)...

நேர்மை :

இவர் ஒரு நம்பிக்கையாளர், உண்மையாளர் என்று இவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட கூறும் அளவிற்கு நற்பெயர் பெற்றிருந்தார்கள். அரசு கருவூலத்தில் இருக்கும் ஒரு துண்டு பேரிச்சை பழத்தை தனது பேரன் வாயில் போட , இறைத்தூதரோ பதறிப் போய் வாயில் இருந்து பேரிச்சையை வலுக்கட்டாயமாக துப்ப வைத்து "அரசு பணத்தில் எதுவும் நமக்கு சொந்தமானது அல்ல" என்று கூறினார்கள். கருவூலத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனச் சொல்லும் ஆட்சியாளரை காண முடியுமா நம்மால்?

மதினாவில் தொழுவதற்காக பள்ளிவாசல் தேவைப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்காக இரு இளைஞர்கள் இலவசமாகவே இடம் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் இறைத்தூதரோ இலவசமாக வேண்டாம் என்று கூறி பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினார்கள். அவர் இலவசமாகவே அந்த இடத்தை பெற்றிருக்க முடியும்... செய்தார்களா?

ஏழ்மை வாழ்க்கை :

இறைத்தூதர் குடும்பத்தினர் தொடர்ந்து மூன்று நாட்க்களுக்கு எந்த உணவையும் வயிறாற உண்டதில்லை. மற்றவர்கள் பரிதாபம் கொண்டு விருந்துக்கு அழைக்கும் நிலையிலேயே தன் வாழ்நாளை பட்டினியுடன் கழித்துள்ளார்கள்.

இறைத்தூதரிடம் ஒரு பாய் விரிப்பு மட்டுமே இருந்துள்ளது. அதை பகல் நேரத்தில் படுக்கைக்கு விரிப்பாகவும், இரவு நேரத்தில் வீட்டை மறைக்கும் கதவாகவும் பயன்படுத்தினார்கள். பாயின் மீது எவ்வித விரிப்பும் இல்லாமல் படுப்பதால் அவரின் உடலில் பாயின் தடம் பதிந்திருக்கும். சாதாரண தலையணையே பயன்படுத்தினார்கள். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஆளக்கூடிய ஆட்சியாளர், மாளிகையில் வாழ்ந்திருக்க முடியும். கருவூல பணத்தில் தன் வாழ்நாளை சுகபோகத்தில் கழித்திருக்க முடியும்... செய்தார்களா?


மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் :

மக்களிடத்தில் எவ்வித மரியாதையையும், தனிப்பட்ட கவனிப்பும், சிறப்பும் பெற அவர்கள் ஒரு போதும் விரும்பியதில்லை. மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான இறைத்தூதரை காண்பதும், கேள்வி கேட்பதும், பேசுவதும், பழகுவதும் , ஒன்றாக உணவு அருந்துவதும் அந்தப் பகுதி மக்களுக்கு பெரிய விஷயமாக இருக்கவேயில்லை.

முன்பு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க தாமதமானதால் கோபம் கொண்டு நபியை ஏசுகிறார் ஒரு யூதர். ஆனால் இவரோ பொறுமையாக கடன்கொடுத்தவருக்கு உரிமை இருக்கிறது, அவரை துன்புறுத்த வேண்டாம் என தன் தோழர்களுக்கு கட்டளையிடுகிறார். இறைத்தூதர் நினைத்திருந்தால் ஆட்சிதலைவராக தண்டனை வழங்கியிருக்கலாம். அதற்கான அதிகாரமும் இவருக்கு உண்டு. ஆனாலும் செய்தார்களா?

தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டை வைத்து ஏற்பாடு செய்த விருந்திற்கு பொதுமக்கள் அனைவரையும் அழைத்து மக்களோடு ஒன்றாகவே அமர்ந்து உணவருந்தினார்கள்.

"அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் அல்லாஹ் என்னை ஆக்கவில்லை" என்றார்கள். இத்தகைய ஆட்சியாளரைக் கண்டதுண்டா ? தனக்கு கொடுக்கப்பட்ட பரிசை தானே முழுமையாக அனுபவித்திருக்க முடியும். செய்தார்களா?

மரியாதை காரணமாக நடுக்கத்துடன் இறைத்தூதரை காண வந்தார் ஒரு நபர். "சாதாரணமாக இருப்பீராக. சாதாரண குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்" என்று கூறி சகஜ நிலைக்கு அந்த நபரைக் கொண்டுவருகிறார்கள் .
பள்ளிவாசல் கட்ட கல் சுமப்பதும், அகழ் வெட்டுவதும் என மக்களோடு மக்களாக தாமும் இணைந்து செயல்பட்டார் இந்த மாமனிதர்! தன் ஆட்சிக்குட்பட்ட சாதாரண மக்களின் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பவராகவும், குடும்பங்களில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால் நேராக அவர்கள் வீட்டிற்கே சென்று விசாரிப்பதுமாக மக்களோடு ஒன்றிணைந்த வாழ்க்கை வாழ்ந்தார் இந்த உத்தம மனிதர்

அனைவரும் சமமே! :

பள்ளிவாசலை கூட்டி சுத்தம் செய்யக்கூடியவர் எங்கே? என கேட்க, அப்போது தான் அவர் இறந்த விஷயத்தை சொல்கிறார்கள். இதனை ஏன் எனக்கு முன்பே கூறவில்லை என கடிந்துக்கொண்டதோடு அந்த சாதாரண வேலையாளின் அடக்க ஸ்தலத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார்கள். இறைத்தூதரின் பணியாளர் அனஸ் (ரலி) அவர்களின் பாட்டி இறைத்தூதரை விருந்துக்கு அழைக்க, மறுப்பு சொல்லாமல் அந்த ஏழை வீட்டு விருந்தை ஏற்றுக்கொண்டார் இந்த வல்லரசின் ஆட்சியாளர்!

புகழுக்கு ஆசைப்படாத மாமனிதர்:

ஒரு நபர் இறைத்தூதரை புகழ்ந்துகொண்டிருக்க, அதை நிறுத்தச்செய்து, "என்னை வரம்பு மீறி புகழாதீர்கள், நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். மற்றும் அல்லாஹ்வின் அடியானும் , அவனது தூதரும் ஆவேன். அல்லாஹ் தந்த இந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன் என்றார் அந்த அற்புத மனிதர்!

ஹியாரா எனும் பகுதி மக்கள் தன் தலைவருக்கு சிரம் பணிவதை கண்ட நபிதோழர் நபி (ஸல்) "நாங்கள் சிரம் பணிந்திட அதிக தகுதியுடையவர் நீங்கள் தாம்" என்றார். அதை மறுக்கும் விதமாக "நான் இறந்த பின் என் அடக்கஸ்தலத்தில் சிரம் பணிவீரா?" என திருப்பிக் கேட்டார் இறைத்தூதர் அவர்கள் . அதற்கு அவர் "இல்லை... அவ்வாறு செய்ய மாட்டேன்" என்றார். ஆம்.. அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தமக்காக தமக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டுமென யார் விரும்புகின்றாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும் என்றும் கூறினார்கள். தான் வாழ்ந்த போதும் கூட அல்லாமல் தான் இறந்த பின்னும் கூட அடுத்தவர் தம்மை சிரம் பணிவதை விரும்பதவராக இருந்தார் இந்த முன்மாதிரி ஆட்சியாளர்.

ஏதேனும் மக்களுக்கு கட்டளையிடும் போது "நபியே நாங்கள் உங்களை போன்று இல்லை (அதாவது நீர் எம்மை விட சிறந்தவர் என கூறக்கூறுவது)" என கூறினால் கடுங்கோபம் கொள்பவர்களாக இருந்தார்கள். தானும் மற்றவர்களை போலவே என்று கூறிவந்தார்!

சலுகை பெறாத உத்தம மனிதர்:

அரசு பணியில் ஜகாத் வசூலிக்கும் பொறுப்பை தனது மகன்களுக்கு கொடுக்க சொல்லி இறைதூதரின் பெரியதந்தை கேட்க இறைதூதரோ அதை மறுத்தார்.
தனது பெரிய தந்தை ஜகாத் பணம் கொடுக்க மறுக்க, ஜகாக்கத்தை வசூலிப்பதோடு அதேயளவு தொகை அபராதமாக வசூலிக்கும்படி உத்தரவிட்டார். தன் உறவினர் என்பதற்காக எவ்வித சலுகையும் அவர் பெறவில்லை!தன் குடும்பத்தாருக்கும் கொடுக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்தின் உரிமையாளருக்கும் அது பிடித்தமானது. "நீங்கள் விரும்பும் பொருளிலிருந்து செலவு செய்யாதவரை நன்மையை அடைய மாட்டீர்கள்" என்ற திருக்குர் ஆனின் வசனத்தைக் குறிப்பிட்டு, அதை நபியவர்களுக்கே பரிசளிக்க, அதை ஏற்காமல், உமது நெருங்கிய உறவினர்களுக்கே அதை வழங்குங்கள் என்ற நபியவர்கள் தனது சொத்துக்கள் எல்லாவற்றையும் பொதுவுடமையாக்கிவிட்டு இறக்கும் தருவாயில் அடமானம் வைத்த தனது கேடயத்தை மீட்க வசதியில்லாதவராகவே இறந்தார்கள்.

பிறமதத்தவர்களிடம் :

இறைதூதர் அவர்களை பிரேதம் ஒன்று கடந்து சென்றது. உடனே நபியவர்கள் எழுந்து நின்றார்கள். உடன் இருந்தவர்கள் அது பிற மதத்தவரின் பிரேதம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாமனிதரோ "அதுவும் ஓர் உயிரல்லவா?" என பதிலுரைத்தார்கள்.

இஸ்லாத்தை ஏற்காத எனது தாய் வந்திருக்கின்றார். அவரை நான் என்னுடன் வைத்துக்கொள்ளலாமா? என்று ஒரு பெண் இறைத்தூதரிடம் கேட்டபோது, "அவர் உம் தாயல்லவா? அவரை உம்முடன் வைத்துக்கொள்வீர்ராக!" என்றார்கள்.

எதிரியிடத்திலும் நேர்மை :

தான் சாப்பிட்ட இறைச்சியில் விஷத்தை கலந்த யூதப் பெண்ணை, தான் வேதனையை அனுபவித்தபோதிலும் மன்னித்தார்கள்.

போரில் கைப்பற்றப்பட்ட கைபர் பகுதியை தனக்குரியதாக ஆக்கிக்கொள்ளாமல் அங்கு வசித்து வந்த யூத மக்களுக்கே உரிமை கொடுத்தார்கள்.

போர்க் களத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்ட இறைத்தூதர்... பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக்கூடாது என கடுமையாக எச்சரித்தார்கள். போரின் போது முகங்களை தாக்கக்கூடாது, இறந்த உடலை சிதைக்கக் கூடாது, நீர்நிலைகள், நிழல் மற்றும் பயன் தரும் மரங்களை சேதப்படுத்தக் கூடாது என கடுமையான விதிகளை விதித்தார்.
**********************
வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், ஒவ்வொரு செயல்களிலும் எப்படி வாழ வேண்டும் மக்களுக்கு வாழ்ந்துகாட்டியவர். அறிவுரையோடு நிறுத்தாது தன்னிலிருந்தே நடைமுறைபடுத்தி, தானும் கடைபிடித்து மக்களையும் கடைபிடிக்க செய்து நல்வழிபடுத்தியவர்!
**********************
வாய்ப்புகள் நிறைய இருந்தும் சுகபோகத்தில் வாழாத , அதிகாரம் இருந்தும் சலுகைகள் பெறாத, அரசு சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளாத, தனது வாரிசுகள் கூட அரசு பணத்தை அனுபவிக்க விடாத, தனக்கான சிறப்பான இடத்தை பயன்படுத்தி மக்களை தனக்குக்கீழ் பணிய வைக்காத, மாற்றுமதத்தவரை மதித்த, பேதம் கடைபிடிக்காத, எல்லாவித மக்களையும் சமமாக பாவித்த, எதிர்களிடத்திலும் நேர்மையைக் கடைபிடித்த, போர்க்களத்திலும் விதிமுறைகள் வகுத்த, தன் வாழ்நாள் முழுவதையும் வறுமையிலேயே கழித்த, பெண்கள் ஒருபோதும் ஆண்களுக்கு அடிமை அல்ல எனக்கூறி பெண்களை சிறப்பித்த, அப்பழுக்கற்ற, நற்பண்புகள் பொருந்திய இந்த மாமனிதரை . இஸ்லாமிய மக்கள் ஏன் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்றார்கள் என்பதை இப்போது உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி- islamiyapenmani.com
-SA-

௨ங்கள் அன்பிற்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 — with Hindu Veeran, Gowri Shanker, Vidhu Haasan, Manutd Guru, Tamil Arasan, Gobu Rg, Swami Vidyananda, Gobi Kannan, Enlightened Master, Vishwa Roopam, Nathan Astel,Karthik Prabhu, SB Nataraj Mannargudi, Meeran Sait and Karthik Anantharaman.
Like ·  ·  · January 11

  • Manutd Guru உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்து, 'இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மத் செய்த சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்து(கள் கொண்ட பத்திரம்) ஆகும். (அந்த ஷரத்துகளாவன:) (முஸ்லிம்களின்) ஆயுதம் எதுவும் உறையிலிருந்தபடியே தவிர, மக்காவினுள் நுழையக்கூடாது. மக்காவாசிகளில் எவரும் முஹம்மதைப் பின்தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது" என்று எழுதினார்கள். (அடுத்த ஆண்டு) நபி(ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்தபோது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணையான மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை)விட்டு வெளியேறும்படி கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் கழிந்துவிட்டது" என்றார்கள். நபி(ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்" என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்" என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)" என்று கூறினார்கள்.

    அதாவது அலி எழுதியதை அழிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த பின் , முகமது வேறுவழியில்லாமல் தானே அதை எழுதியதாக இருக்கிறது ... இல்லை நான் தான் இதை படித்து தவறாக புரிந்துகொண்டு இருக்கிறேனா?

No comments:

Post a Comment